கல்முனை கமு/கமு/ மஃமூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு – I ஐ சேர்ந்த ஹாஜியானி சித்தி சமதா முகம்மது மஸ்ஸுது லெவ்வை இன்று (15) பதவி ஏற்க உள்ளார்.
இப் பாடசாலையின் பழைய மாணவியான இவர் இப்பாடசாலையில் கல்வி கற்று விவசாய பீடத்திற்கு தெரிவான முதல் மாணவியாவார்.
1996 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விவசாயத்துறையில் விசேட பட்டம் பெற்று வெளியான இவர் 1998 ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு தொடர்ச்சியாக 14 வருடங்கள் கல்வி பொது தராதர உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு கற்பித்து கொடுத்ததன் மூலம் பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் பணி பற்றிய ஆசிரிய பெருந்தகை ஆவார்.
2012 ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையில் இணைந்து கொண்ட இவர் அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக இப்பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக பணியாற்றி வருகின்றார்.
2018 ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு ஒன்றிற்கு பதவி உயர்த்தப்பட்ட இவர் தொடர்ச்சியாக இப்பாடசாலையின் நிர்வாக இயந்திரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
2023 ம் ஆண்டு இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய யூ எல் எம் அமின் ஓய்வு பெற்று செல்லும் போது பாடசாலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அப்பதவியில் தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
பாடசாலை நிர்வாகம், முகாமைத்துவம் போன்றனவற்றில் மிகுந்த அனுபவமும், சிறந்த நிர்வாக திறனும், ஆளுமையும் கொண்ட இவர் மீண்டும் இன்று முதல் இப் பாடசாலையின் அதிபராக கடமை ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று கடமையேற்கும் புதிய அதிபருக்கு கல்வி சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-எஸ் ஜே புஹாது