ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இழந்த கலாசார வாழ்க்கையை மீண்டும் கொண்டு வர திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களின் பணியை பாராட்டிய ஜனாதிபதி அதற்காக தனது நன்றியையும் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் வாழும் மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மேலதிகமாக, அவர்களின் கடினமான வாழ்க்கை முறையைத் தணிக்க ஒரு கலாச்சார வாழ்க்கையை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கலாச்சார செயற்பாடுகள் மூலம் நாட்டில் ஒழுக்கநெறியான குடிமகனைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரங்கக் கலைத் துறையில் உள்ள கலைஞர்களுக்கு வலுவான தொழில்முறை மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் ஒரு கலாசார பாலத்தை கலைஞர்களால் கட்டியெழுப்ப முடியும் என்று கூறிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் ஒரு கலாசார மறுமலர்ச்சியை உருவாக்க உண்மையான நோக்கமுள்ளது என்றும், அந்த நோக்கத்திற்காக அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கை அரங்க நிகழ்ச்சி மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம், இசைக்குழு சங்கம், பாடகர்கள் சங்கம், அறிவிப்பாளர்கள் சங்கம், நடனக் குழு சங்கம், ஒலி கட்டுப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பல கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் தமது துறையில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அந்த நேரத்தில் அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்தார்.இது தொடர்பில் கலந்துரையாடலில் பங்கேற்றோர் பாராட்டுத் தெரிவித்தனர். இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இலங்கை அரங்கக் கலை கலைஞர்கள் ஒருங்கிணைந்த மன்றத்தின் சார்பாகப் உரையாற்றிய பாடகர் ரொஷன் பெர்னாண்டோ, தற்போதைய ஜனாதிபதி இலங்கையில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகவும், ஒரு கலைஞராக பங்களிக்க விருப்பத்துடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் , சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு