கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கம்பளை, தொலுவ பகுதியில் உள்ள விகாரைக்கு முன்பாகவே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த மூவரும் அந்த விகாரைக்கு வழிபாடுகளில் ஈடுபட வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் வீதியின் ஓரத்தில் பயணித்த போது, அங்கு வேகமாக பயணித்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதோடு, அங்கு பயணித்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இதனை அடுத்து லொறியும் அந்த பெண்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது நான்கு பெண்கள் காயமடைந்த நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றொரு பெண் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கு காரணமான காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார்.
அவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பெண் தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விகாரைக்கு அருகில் பயணித்த போது அந்த பெண் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்தியுள்ளார்
இதனால் கார் வேகமாக சென்று வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.