நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.20) எழுப்பிய கேள்வி.
ஒரு நாட்டின் குடிமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்வது அரசாங்கமொன்றினது அடிப்படைப் பணியாகும்.
இங்கு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகவும் காணப்படுகிறது.
இருப்பினும், நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது.
கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ள சூழலில், இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இந்த விடயம் தொடர்பாக நானும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தாலும், இதுவரை போதுமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, இதற்கான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்து நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.
- நாடு முழுவதும் நிகழந்து வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்/ கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனில், இடைவிடாத துப்பாக்கிச் சூடுகள்/கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான குறிப்பிட்டதொரு திட்டத்தை அரசாங்கம் இந்த சபையில் முன்வைக்குமா?
- நாடு முழுவதும் வன்முறை அதிகரிப்பதற்கும் தேசிய பாதுகாப்புக்கும் தொடர்பு இருப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக இல்லையா? வன்முறை அதிகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈர்ப்பில் ஏற்படும் எதிர்மறை தாக்கம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?
- நாடு முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் போதைப்பொருளுக்கு நேரடியாகப் பலியாகி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதே நேரத்தில் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதல்களால் சாதாரண மக்கள் கூட பலியாகி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்ததாகத் தோன்றுவதால், இதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் மாற்றுத் திட்டம் உள்ளதா? அது யாது?
- பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? பதிவான சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது?