கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு மோட்டார் சைக்கிளையும், ஒரு தொகை பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (31) வியாழக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வருகை தந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை ஊழல் தடுப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 14 கிராம் 800 மில்லி கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 57 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-தில்சாத் பர்வீஸ்