உள்நாடு

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவம் – நீரில் மூழ்கி இறந்த நபருக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள நபருக்கும் இராணுவத்துக்குமிடையில் எந்தவித சம்பந்தமும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நாம் பொலிசாருக்கு விசாரணைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.

தொடர்ந்தும் எமது முழுமையான ஒத்துழைப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் இராணுவ முகாமிற்குள் பலபந்தமாக உட்பிரவேசிக்க முயன்றவர்களை துரத்த முற்பட்ட போது நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பி்ல் விளக்கம அளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (16) தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது.

அங்கு விளக்கமளிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

”இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக ஒரு தரப்பினர் உட்பிரவேசிக்க முயன்றதிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் அவர்களை துரத்துவதற்கு அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நபரை இராணுவத்தினர் பிடித்து அவரை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபர் இதற்கு முன்னர் மேற்படி இராணுவ முகாமில் திருட வந்துள்ள சம்பவத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதுதான் இந்த சம்பவத்தில் இராணுவத்திற்கு காணப்படும் தொடர்பு.

எனினும் சம்பவம் இடம்பெற்றுள்ள மறுநாளே ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு மரணமடைந்தவர் இராணுவ முகாமிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களின் ஒருவர் என்றும் தெரியவந்தது.

எவ்வாறெனினும் மேற்படி மரணத்துடன் இராணுவத்தினருக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது.

பொலிஸார் அது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவிக்கையில்;

”மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போது இரண்டு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

13 இராணுவத்தினரிடமும் மேலும் 11 சிவில் நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நபர்கள் சிலர் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி