தனது உடமையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு உடமையில் இருந்த ஐஸ் போதைப் பொருளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (08) வியாழக்கிழமை காலை வேளையில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டவட்டை பகுதியில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பெருங்குற்ற பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 21 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 470 மில்லிகிராம் மீட்கப்பட்டது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்