அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (08) புதன்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவரையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
மனைச்சேனை பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 520 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.சமந்தவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி.ரத்னவீரவின் அறிவுறுத்தலுக்கமைய, மட்டக்களப்பு வலய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என்.குலதுங்கவின் வழிகாட்டலில், கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-தில்சாத் பர்வீஸ்