ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்கு கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவ குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-எம்.ஆர்.எம்.வசீம்