நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும்.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் அணி பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியாக தொலை பேசி சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது.
இதில் ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 2 இலட்சத்தி 49ஆயிரத்தி 435 வாக்குகளை பெற்றிருந்தது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15 வீதமாகும்.
என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கி இருந்தது. இதில் சஜித் பிரேமதாசவுக்கு 55இலட்சத்தி 64ஆயிரத்தி 239 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அதன் பின்னர் 2020 பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தற்போது இடம்பெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலிலேயே யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது.
இந்த தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது வீழ்ச்சியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி புதிய ஜனநாயக முன்னணியில் சிலிண்டர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
-எம்.ஆர்.எம்.வசீம்