பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான சட்டமூல வரைவு, அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிபுணத்துவம் வாய்ந்த சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி சட்டமூல வரைவு, பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கமைய, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.