பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதியை ரூ. 10 இலட்சத்திலிருந்து ரூ. 2 ½ இலட்சமாக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 19 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ரூ. 1 மில்லியன் உயர்ந்தபட்ச காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூ. 1,000,000 காப்புறுதிக் காப்பீட்டு எல்லையை ரூ. 250,000 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளார்.
அதற்கமைய, 2025.10.09 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூ. 250,000 ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.