அரசியல்உள்நாடு

எந்தவொரு பலப்பரீட்சைக்கும் நாம் தயார் – ஆகையால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக சேவைப் பயணத்திலும் அரசியல் பயணத்திலும் மக்களுடன் இருப்பதால், எந்நேரத்திலும் எத்தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஒன்றிணைந்து பணியாற்ற தயார். இங்கு கட்சிகளினது தனித்துவ அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு பணியாற்றுவோம்.

இந்த ஒன்றிணைவு சந்தர்ப்பவாத அரசியல் இலக்குகளை மையமாகக் கொண்டில்லாது, கொள்கை ரீதியாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவே அமையும். இதன் பொருட்டே ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டி அஸ்கிரிய மகா விஹாரைக்கு இன்று (15) காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய மகா விகாரையின் அனுநாயக தேரர் அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்து, ஆசி பெற்றுக் கொண்டதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதாக இருந்தால், தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவியுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு தயாராகவே உள்ளது. எந்தவொரு கருத்துக் கணிப்புக்கும், எந்தவொரு பலப்பரீட்டைக்கும் நாம் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்தோரை ஐக்கிய மக்கள் சக்தியினரான நாமே வெளிக்கொணர்ந்தோம்.

இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்தே அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான தீர்ப்பைப் பெற்றுக் கொண்டது.

நாட்டை வங்குரோத்தடையச் செய்தோரை நீதிமன்றத்தில் வெளிக்கொணர்ந்தது ஐக்கிய மக்கள் சக்தியே என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு கைவிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுத்தமையினாலயே, மின்சாரக் கட்டண அதிகரிப்பை கைவிட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடி, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த சமயம், ஐக்கிய மக்கள் சக்தியே அதற்கு எதிர்ப்பை தெரிவித்தது. இதன் பிரகாரம், அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணங்களில் திருத்தங்களை செய்யாதிருக்க தீர்மானித்தது.

அரசாங்கம் கூறிய பிரகாரம், மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதைக் கட்டாயப்படுத்தி, எதிர்காலத்தில் மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருளை இல்லாதொழித்தே ஆக வேண்டும்.

ஒரு கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி நல்லதை நல்லதாகவும் கெட்டதை கெட்டதாகவுமே பார்க்கின்றது. 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது நல்ல விடயம் போலவே, போதைப்பொருள் வர்த்தகத்தையும் இல்லாதொழிப்பது நல்லதொரு விடயமாகும்.

போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையைச் செய்வது யாராக இருந்தாலும், அதனால் நாட்டுக்கு நல்லது நடப்பதாக இருந்தால், அதற்காக முன்நிற்போம்.

இன்று பாடசாலைக் கட்டமைப்பில், ஐஸ், ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பரவுவதை தடுத்தே ஆக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இதே வழியில் போனால், 2028 இல் எம்மால் கடனை செலுத்த முடியாது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. பேரியல் பொருளாதாரம் மற்றும் நுண்ணியல் பெருளாதாரம் என இவை காணப்படுகின்றன.

நுண்ணியல் பெருளாதாரம் தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் குடும்ப அலகுகள், தனிப்பட்ட நிறுவனங்கள், தனிப்பட்ட வியாபார தொழில் முயற்சிகள் போன்ற சிறிய பிரிவுகளை கவனிக்கிறது.

அரசாங்கம் செய்து வரும் செயல்களால் இந்த நுண் பொருளாதார துறையினருக்கு எந்த நிவாரணமும் கிடைத்தபாடில்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து காணப்படுகின்றன.

கையில் புழங்கும் பணத்தின் அளவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. இந்தப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் காணப்படுவதாக தெரியவில்லை.

இவ்வாறு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாமல் போகும் பட்சத்தில், 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துவது சிக்கலுக்குரிய ஒன்றாக மாறும் அபாயம் காணப்படுகின்றது.

இதன் பொருட்டு, சகல துறைகளிலும் விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாம் வீடுகளை நிர்மாணித்தோம். தற்போதைய அரசாங்கத்தைப் போல நாம் வெறும் காகித பத்திரங்களை பகிரவில்லை.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை. 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு, பத்து இலட்சம் வீடுகள், பதினைந்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

2500 மாதிரி கிராமங்கள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 300 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. 2500 வீடுகளை நிர்மாணிப்போம் எனக் கூறி வெறுமனே காகிதத் துண்டுகளை பகிர்ந்தளிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor

சபாநாயகரை தோற்கடித்த தீவிரம்: அரசியல்வாதிகளின் வீட்டில் முக்கிய பேச்சு

கொழும்பு மேயராக ருவைஸ் ஹனிபாவா?

editor