அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம் – ரஞ்சித் மத்தும பண்டார

உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளை ஸ்தாபிக்கும் போது கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (16) வழக்கு விசாரணைக்காக சென்றதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திருடர்களை பிடிப்பதற்கும், ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஊழல் எதிர்ப்புக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஊழல் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை அச்சுறுத்துவதாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.நீதிமன்றம் சுயாதீமான முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

ஊழல்வாதிகளை பிடிப்பதாக இந்த அரசாங்கம் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டது. பல பில்லியன் ரூபா மோசடி செய்தவர்கள் உள்ளார்கள்.அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை முடக்குவதாக குறிப்பிட்டார்கள், உகண்டாவில் இருந்து நிதியை கொண்டு வருவதாக குறிப்பிட்டார்கள்.

ஆனால் இன்று அவற்றை மறந்து விட்டு பிரதான எதிர்க்கட்சியை முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

பாராளுமன்றத்துக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு மேற்கொள்கிறது.

அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் போது அந்த முறைகேடுகள் குறித்து ஆராயாமல் முறைப்பாடுகளை முன்வைக்கும் தரப்பினர் இன்று இலக்குப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை ஸ்தாபிக்கும் போது கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.

எதிர்வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் எவ்வாறு நாங்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்