யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது, மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில், தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குபடுத்தினர்.
மரணத்திற்கான காரணம் உறுதியாகாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ளன.
-கஜிந்தன்