நாட்டில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டை நீக்க உப்பு இறக்குமதிக்கு சந்தை திறந்து விடப்பட்டதுடன் இதுவரை 26,8000 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை வரை 15, 800 மெற்றிக்தொன் வரையான உப்பு நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என சபையில் தெரிவித்த அவர், அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு 1 கி.கிராமின் அதிகபட்ச விலை ரூ. 84, 85 இற்கும், குறைந்தபட்ச விலை ரூ. 65 இற்கும் விற்பனைசெய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் அதனை மீறி செயல்படுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில்.
ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
”நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். இறக்குமதிக்கு காணப்பட்ட வரையறையை நீக்கியிருந்தோம்.
அதன்படி இதுவரை 2 இலட்சத்து 68ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதியாகும் என நாம் நினைக்கவில்லை.
நேற்று முன்தினம் வரை 15, 800 மெற்றிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் இல்லாத இரண்டு வகை உப்பும் உள்ளடங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து ரூ. 280 வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.
என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.