ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது.
கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவி வரும் இராஜதந்திர நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இதன் நோக்கம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுரேனியம் செறிவூட்டலை மட்டுப்படுத்தல், பெலஸ்டிக் ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஈரானிய சார்பு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதை மட்டுப்படுத்தல் என்பன குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.
நியாயமான மற்றும் நீதியான முறையில் இப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தாம் வெளியுறவு அமைச்சருக்கு அறிவுறுத்தியதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
