தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.
தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்கு சொந்தமான ரூபா 8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.
இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் ரூபா மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை இயக்குங்கள்” என முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.
இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
