இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி
வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 54 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில், இலஞ்ச சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குறித்த காலகட்டத்தில் 6 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இலஞ்சம் தொடர்பான 273 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, 928 கிலோகிராம் ஹெராயின், 1,396 கிலோகிராம் ஐஸ், 27 கிலோகிராம் கொக்கையின், 381 கிலோகிராம் ஹஸிஸ் மற்றும் 11,192 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.