செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 17 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டறிவதற்காக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டம்” (AI Singapore) உடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
அதற்காக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை முறைமைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த ஆய்வுகளை ஆரம்பித்தல், செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை உருவாக்கிக் கொள்வதே நோக்கமாக உள்ளது.
அதற்கமைய, இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக டிஜிட்டல் பொருதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.