மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக எமது அரசாங்கத்திலுள்ள எவருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும், ஒருவருட காலத்தில் இவ்வாறான சிறந்த அரசியல் கலாசாரத்தை எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் கடந்த ஒருவருட கால நடவடிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தது உரையாற்றிய அவர்,
நாம், அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது நாட்டின் அபிவிருத்தி முடக்கப்பட்டிருந்தது.
2015க்கு பின்னர் பாரிய அபிவிருத்தி என எதுவும் நாட்டில் இடம்பெறவில்லை.
இத்தகைய ஒரு நாட்டை பொறுப்பேற்று, பல்வேறு அபிவிருத்திக்கு திட்டங்களை ஒருவருட காலத்தில் முன்னெடுத்திருக்கிறோம்.
குறிப்பாக கடவத்தை, மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வீதி நிர்மாணப் பணியை ஆரம்பித்திருக்கிறோம்.
அதேபோன்று, பல பாடசாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் என்ன செய்திருக்கிறது என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.
ஆனால், உள்நாட்டில் மாத்திரமல்ல, வெளிநாடுகளில் இருப்பவர்களும் தெரிவிக்கும் விடயம்தான், நாட்டின் ஆட்சி இந்த அரசாங்கத்திடம் கிடைத்திருக்காவிட்டால், எமது நாடு ஐஸ்லாந்தாகியிருக்கும் என்பதாகும்.
அதாவது, போதைப்பொருட்களின் சுயபோக நாடாக இந்த நாடு மாறியிருக்கும்.
பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாது மாணவிகளும் வடக்கிலும், கிழக்கிலும் தெற்கிலும் நாடுபூராகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலைக்கு கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கி, அதற்கான பாதுகாப்புகளையும் வழங்கியிருப்பர்.
இன்று கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்கள் நாட்டில் பாவனைக்கு வந்திருந்தால், நாட்டின் நிலை என்னவாகி இருக்கும்? பாதாள உலகத்தை உருவாக்கி பாதுகாத்து வந்த நிலைமை தற்போது மாற்றம் அடைந்துள்ளது.