திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்று (10) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வருவதுடன் குச்சவெளி -சல்லிமுனை பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஐயூப்கான் இபாஸ் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது.
குச்சவெளி சல்லிமுனை என்ற இடத்தில் வீட்டுத் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் அவரது வீட்டிலிருந்து தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலையில் குறித்த மின்சாரத்தை சுவிட்ச் ஓப்பண்ணி வருகின்ற நிலையில் நேற்று (10) அதனை துண்டிக்காமல் மறந்த நிலையில் இருந்துள்ளார்.
குறித்த சிறுவன் வழமை போன்று அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் மின்சார கம்பியில் சிக்கி வீசி எறியப்பட்டதாகவும் இதனை அடுத்து குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மரணம் தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
