அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கிறது.

எனவே அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கு அவர் நாட்டுக்கு வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பசில் ராஜபக்ஷவுக்கு நாட்டுக்கு வரவுவதற்கு உரிமை இருக்கிறது. அவர் வரவில்லை எனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர். 

வந்தால் நாமலுக்கு உதவுவதற்காக வருவதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சிறந்தது என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய காரணியாகும்.

அவர் நாட்டுக்கு வர வேண்டும். அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

சவால்களை எதிர்கொள்வதோடு அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். அவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாமல் ராஜபக்ஷவுக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பதிலளிக்க முடியாது. 

தன் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக எதிர்கொண்டு அவற்றுக்கு பதிலளித்து தான் குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

அப்போது தான் இந்த அரசாங்கத்துக்கு யார் சரி, யார் தவறு என்பது புரியும். பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கும். அவர் நாட்டுக்கு வந்து விட்டரெனில் அந்த பேச்சுக்களும் முடிந்து விடும்.

நாமல் ராஜபக்ஷவுக்கு உதவுவதற்கு பசில் நாட்டுக்கு வர வேண்டிய தேவை இல்லை. அமெரிக்காவிலிருந்து கூட உதவ முடியும். 

எவ்வாறிருப்பினும் இந்த அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கு அவர் நாட்டுக்கு வர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவுகள் அதிரடியாக உயர்வு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டை அறிமுகம்!