அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நாட்டில் கிட்டத்தட்ட 11 இலட்சம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர்.

இவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% ஆன பங்களிப்பை இவர்கள் நல்குகின்றனர்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நான்கு பெரும் துயர் சம்பங்களினால் அவர்களின் தொழில் முயற்சிகள் மற்றும் வியாபாரங்கள் வீழ்ச்சி கண்டன.

இதற்கு அவர்கள் காரணமல்லர். அவர்களின் தவறால் இது நடக்கவில்லை. 2022 புள்ளிவிவரங்களின்படி, 263,000 தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுமார் 150,000 தொழில் முயற்சிகள் வங்குரோத்தடைந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் கடனை மீளச் செலுத்துவதற்கு 2028 வரை சலுகைக் காலம் கிடைத்திருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக காணப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகளுக்கு பராட்டே சட்ட அமுலாக்கத்தில் இருந்து தற்காலிக சலுகையே கிடைத்தன. ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர்களினது கடன்கள் மறுசீரமைக்கப்படவில்லை.

எனவே, பல கடுமையான பிரச்சினைகளை இந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆகையால், இவர்களின் பிரச்சினைகளுக்கு பிரயோக ரீதியிலான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களினது தலைமையில் நேற்று (03) பாராளுமன்றத்தில் கூடியது.

இதில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சலுகைக் கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரால் இந்தக் கடன்களைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றன. இதனால் இவர்கள் பெரும் கடன் பொறியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

எனவே தெளிவானதொரு சலுகைத் திட்டத்தை முன்னெடுக்குமாறும், இந்தக் கடன் திட்டத்தைப் பெறுவதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் நிவாரணங்களை இவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியிலும் நமது வங்கிக் கட்டமைப்பு மிகை இலாபங்களை ஈட்டியிருப்பதால், இந்த இலாபத்தின் நன்மைகளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சாதாரண இலாபம் ஈட்டியிருக்க வேண்டுமானாலும் இங்கு வங்கிகள் மிகை இலாபங்களை ஈட்டியுள்ளன.

அதில் ஒரு பகுதியை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குப் பெற்றுக் கொடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது அரசாங்கத்தின் பொறுப்பாகவும் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்

எதிர்வரும் 17ம் திகதி முதல் முடக்கப்படும் இடங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்