அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், பௌதீகவியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று (10) மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“வெனிசுலா மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், நிச்சயம் நமது இலக்கை அடைவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறேன்.
இப்போது நாம் ஜனநாயகம் எனும் சுதந்திரத்தை எட்டும் நிலையை அடைந்துள்ளோம்.
இதில் நமக்கு ஆதரவு தந்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மக்கள் மற்றும் உலகத்தின் அத்தனை ஜனநாயக நாடுகள் உள்ளன.
இந்த விருதை வெனிசுலாவில் துயரத்தில் உள்ள மக்களுக்கும், நமது நோக்கத்துக்கு நிலையான ஆதரவு அளித்த ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
யார் இந்த மரியா கொரினா? – மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை.
இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது.
மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார்.
அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.