அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்குள் கடல் வழியாக பிரயாணம் செய்து அகதிகளாக நுழைகின்றனர்.
இந்நிலையில் லிபியாவிலிருந்து 97 பேர் மத்திய தரைகடல் வழியாக நேற்று (13) சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த அகதிகள் பயணித்த படகு இத்தாலியின் லெபிடுசா தீவுக்கருகில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இத்தாலி கடற்படையினர் கடலில் மூழ்கிய அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் 17 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.