ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசில்ரீ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, நாளை (13) முதல் வழமைக்குத் திரும்பும் என நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பாலத்தின் இணைப்புகள் ஏற்கனவே பழுதாகியிருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாலம் கடுமையாகச் சேதமடைந்து கடந்த மாதம் (29) இடிந்து விழுந்தது.
அன்று முதல் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பல்லேகல இலங்கை இராணுவத்தின் 31ஆவது பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவினர் ஒன்றிணைந்து, 15 மீற்றர் நீளமுள்ள புதிய இரும்புப் பாலத்தைப் பொறுத்தும் பணிகளை முன்னெடுத்தனர்.
தற்போது இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பாலத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நாளை (13) முதல் பொதுமக்களின் போக்குவரத்திற்காகப் பாலம் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
-செ.திவாகரன்
