திருகோணமலை – வெருகல் புன்னையடி இழுவைப் படகு சேவை ஆபத்தான சூழ்நிலையில் செயல்பட்டு வருவதனை வெருகல் பிரதேச சபை தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டனர்.
வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடமும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் தினசரி பள்ளிக்குச் செல்வதற்கும் இவ்வழி பயன்படுத்தப்படுகின்றது.
புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் மக்கள் இழுவைப் படகு மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்துவரும் நிலை தொடர்கின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்து போன்ற சூழ்நிலைகள் மீண்டும் நிலவக்கூடிய அபாயத்தைக் காட்டி பொதுமக்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, புன்னையடியில் நிலையான பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் அவசர அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென தவிசாளர் கருணாநிதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
-முஹம்மது ஜிப்ரான்
