கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பஸ் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார்.
அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,
இது மிகவும் துன்பகரமான நிகழ்வு. இது போன்ற விடயங்களைத் தாங்கிகொள்வது மிகவும் கடினமானதாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்திருப்பது வேதனையானது.
எமது நாட்டில் தினமும் ஏராளமான போக்குவரத்து விபத்துகள் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க எமது போக்குவரத்து அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நேரத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகின்ற எமது வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அதுபோன்று தங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நோயாளிகளை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அனைவரையும், அந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்த அனைவரையும் நான் நினைவுகூர விரும்புகிறேன்.
இதுதான் எமது நாட்டின் தனித்துவம். இந்த மனித பண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த நேரத்தில், அரசாங்கம் முடியுமான அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதற்காக நாங்கள் தலையிடுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.
வீடியோ