மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் நேற்று அதிகாலை முதல் சந்தேகத்திற்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் கருத்துகளுக்கிணங்க, குறித்த மோட்டார் சைக்கிள் அந்த இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தற்பொழுதுவரை 64ஆம் கட்டை பிரதான வீதியில் காணப்படுகின்றது.
அந்த மோட்டார் சைக்கிளின் பல பாகங்கள் விபத்துக்குள்ளாகி உடைந்த நிலையில் காணப்படுவதுடன், இரத்தக் கறைகள் படிந்த நிலையிலும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அணிந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்று அருகிலுள்ள பகுதியில் சிதறி கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இச்சம்பவம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடையதா என்பது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
