முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது.
கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார மீட்சிக்காக இந்த அரசாங்கம் இதுவரையில் முறையான திட்டங்களை செயற்படுத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பொருளாதார கொள்கைகளையே முழுமையான செயற்படுத்துகிறது.
உத்தேச கல்வி மறுசீரமைப்பு பற்றி பேசப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரித்த கல்வி கொள்கையையே இந்த அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது.
திட்டத்தின் உள்ளடக்கத்தில் பெயர்கள் மாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கல்வி துறையில் உண்மையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் முதலில் நீக்கப்பட வேண்டும்.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் தான் பகிடிவதை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. இன்றும் செயற்படுத்துகிறது.
ஆகவே சிறந்த கல்வி மறுசீரமைப்புக்கு அரசாங்கம் இவ்விரு விடயங்களையும் செயற்படுத்த வேண்டும்.
நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி மறுசீரமைப்பு செயற்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
கல்வி மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கையை கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்க இடமளிக்க முடியாது என்றார்.
-இராஜதுரை ஹஷான்