முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை பெப்ரவரி 13 ஆம் திகதி மீண்டும் விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கினை அடுத்த மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளிநபர்களின் பெயர்களை பயன்படுத்தி, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளைத் தனது சொந்த வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் ஊழல் மோசடி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரதிவாதிகளுக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
