உள்நாடுபிராந்தியம்

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (25) மதியம் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட கிளை அமைப்பின் ‘நேசக்கரம் பிரஜைகள் குழு’ அங்கத்தவர்களுக்கும், மன்னார் நகர சபை உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கியமான கலந்துரையாடலாக இடம் பெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் பிரதீப் வணிகசூரிய, மன்னார் நகரசபை தவிசாளர் டானியல் வசந்தன்,நகர சபையின் உறுப்பினர்கள் ஏழு கிராமங்களிலிருந்து பிரதிநிதித்துவம் செய்த மக்கள்
சார்ந்த உறுப்பினர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்டப் பணியாளர்கள், இளைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இக்கூட்டத்தின் சிறப்பம்சமாக மன்னார் நகரசபைக்கு உட்பட்ட சாந்திபுரம்,,உப்புகுளம் பள்ளிமுனை, ஜீவபுரம், ஜிம்றோன் நகர், பனங்கட்டுகொட்டு கிழக்கு மற்றும் பனங்கட்டுகொட்டு மேற்கு போன்ற பகுதிகளில் காணப்படும்
பிரச்சினைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அதில் இருந்து மிக முக்கியமான மூன்று பிரச்சினை கள் காணொளியாக பதிவு செய்து கூட்டத்தில் திரையிடப்பட்டது.

காணொளி காட்சியைத் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் நிலவும் பிரச்சினைகளை நேரடியாக விளக்கி அதற்கு உரிய தீர்வுகளை உடனடியாக எடுத்து வழங்குமாறு வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த நகரசபை தவிசாளர் மக்களால் முன் வைக்கப்பட்ட குறைகளை விரைவில் தீர்த்து வைக்க நகரசபை
உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளுவதாக தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மன்னார் நகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் 10 உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

Related posts

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.