உள்நாடுபிராந்தியம்

மன்னார், அடம்பனில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறை

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்குச் சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார்.

வழக்குத் தொடுநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.

தண்டனை குறித்த தனது சமர்ப்பணத்தில், அரச சட்டவாதி தனுஷன், “இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்” கடுமையாக வலியுறுத்தினார்.

மேலும், “எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறைத் தண்டனை வழங்க வேண்டும்” எனவும், “கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறும்” மன்றை அவர் கோரினார்.

அரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

“இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்கத் தயார்”

பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி – 25 பேர் காயம்

editor