வணிகம்

மத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து ரூ. 60 பில்லியன் கடன்

(UTV|COLOMBO) – மத்திய நெடுஞ்சாலை திட்டத்தின் சில இடங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமல் போனதன் காரணமாக நாட்டின் மூன்று தேசிய வங்கிகளிடம் இருந்து 60 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான இரண்டாம் கட்டத்துக்காக மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய மூன்று தேசிய வங்கிகளிடம் இருந்து 60 பில்லியன் ரூபா நிதியைப் பெறுவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி கடனுக்கு உத்தரவாதமாக மற்றைய நெடுஞ்சாலைகளில் இருந்து கிடைக்கும் தீர்வு சேகரிப்பு வருமானத்தின் மூலம் ஈடுசெய்யலாம் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய நெடுஞ்சாலை திட்டம் இவ்வருடம் நவம்பர் மாதம் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து இத்திட்டம் எதிர்வரும் மே மாதமே முடிவடையும் என்று தெரியவருகிறது. மத்திய நெடுஞ்சாலை நிர்மாணத்தில் மீதமுள்ள வேலைகள் நிறுத்தப்பட்டால் ஒப்பந்தம் செய்துள்ள உள்ளூர் நிறுவனங்களில் தொழில் செய்யும் சுமார் 5,000 நேரடி ஊழியர்களுக்கு வேலை இல்லாமற் போகும் என்பதை அமைச்சரவை கணக்கில் எடுத்துள்ளது. அத்துடன் நெடுஞ்சாலை அமையவுள்ள காணிகளின் சொந்தக்காரர்களுக்கு 9.5 பில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

Related posts

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு

சுமார் 9 வருடங்களின் பின்னர் வில்பத்துவின் நுழைவாயிகள் திறப்பு