இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் புத்தளத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புத்தளத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், புத்தளம் நகரம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது , நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத் தாண்டவத்தினால் உயிரிழந்த பொதுமக்களுக்காகவும் இருநிமிடங்கள் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
அத்துடன், தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் புத்தளம், கருவலகஸ்வௌ, ஆனமடுவ, பல்லம ஆகிய கலாச்சார மத்திய நிலையங்கள், புத்தளம் இந்துக் கல்லூரி, புத்தளம் சென். அன்ரூஸ் மத்தியக் கல்லூரி, ஆனந்தா தேசியப் பாடசாலை மற்றும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக மற்றும் முஹம்மட் பைஸல் ஆகியோர் இதன்போது உரையாற்றினார்கள்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களிலும் இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புத்தளம் மாவட்டச் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும், சிரமதானங்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் ஒவ்வொரு பகுதிகளிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-புத்தளம் நிருபர் ரஸீன் ரஸ்மின்
