யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில், இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை 6 மணியளவில் குறித்த இராணுவச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்தவர் ஆவார்.
வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த அவர், முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பிரதீபன்
