தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 6 புதிய ஆங்கிலப் பாடத்திட்டம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகவுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில், விசாரணைகள் முடியும் வரை பதவியிலிருந்து விலகியிருக்குமாறு பிரதமர், கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள், சமூக மட்டத்தில் பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.
இது குறித்து முறையான விசாரணைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு அவர் தனது பணிகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
