ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பான விசேட செயலமர்வுத் தொடரின் கிழக்கு மாகாண செயலமர்வு இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து செயல்பாடுகளும் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனுடன் இணைந்ததாக, புதிய கணினி அடிப்படையிலான ஒன்லைன் முறைமை குறித்து பிரதேச செயலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகியுள்ளது.
அதன்படி, மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் செயலமர்வுத் தொடரின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதிய பணிகளைக் கையாளும் 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குதல், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த தெளிவுபடுத்தல் மற்றும் பயிற்சி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் ஒரு மக்கள் நிதியமாக செயல்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை அடைய, மேல், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இந்த திட்டம் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துகொண்டோருக்கு விளக்கமளித்தார்.
கணினி பொறிமுறை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முதல் அனுமதி அளித்தல் வரையிலான செயல்முறை மற்றும் அனுமதிக்குப் பிறகு மருத்துவ உதவியை செலுத்தும் செயல்முறை குறித்தும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும், பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, கலந்துகொண்ட பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்கள் பங்கேற்றனர்.