உள்நாடு

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டதில் 47222 குடும்பங்கள் பாதிப்பு – 10 பேர் உயிரிழப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை வரையிலான கணக்கெடுப்பின் படி, 301 கிராம சேவகர் பிரிவில் 47222 குடும்பங்களைச் சேர்ந்த 173165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 21 கிராம சேவகர் பிரிவுகளில் 13004 குடும்பங்களைச் சேர்ந்த 47939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாதம்பை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 464 குடும்பங்களைச் சேர்ந்த 1690 பேரும்,

மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 30 கிராம சேவகர் பிரிவுகளில் 988 குடும்பங்களைச் சேர்ந்த 3952 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் 8923 குடும்பங்களைச் சேர்ந்த 31200 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 916 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 1222 குடும்பங்களைச் சேர்ந்த 4049 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 28 கிராம சேவகர் பிரிவுகளில் 9214 குடும்பங்களைச் சேர்ந்த 35943 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 3052 குடும்பங்களைச் சேர்ந்த 10994 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் , நவகத்தேகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளில் 1337 குடும்பங்களைச் சேர்ந்த 4150 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 893 குடும்பங்களைச் சேர்ந்த 2489 பேரும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் 7268 குடும்பங்களைச் சேர்ந்த 27834 பேரும், பல்லம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 37 கிராம சேவகர் பிரிவுகளில் 397 குடும்பங்களைச் சேர்ந்த 1447 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 76 வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளம், தங்கொடுவ, கருவலகஸ்வெவ மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் வீதம் காணாமல் போயுள்ளனர்.

மேலும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஐவரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், வென்னப்புவ, கருவலகஸ்வெவ, மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் வீதமும் இந்த வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 75 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 4104 குடும்பங்களைச் சேர்ந்த 14328 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் வைத்திய சேவைகள் என்பன அந்தந்த பிரதேச செயலாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.

-ரஸீன் ரஸ்மின்

Related posts

ஜகத் சமந்தவுக்கு பிணை

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானம் முன்வைப்பு

ஜனாதிபதி அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

editor