சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க முடியாமல் போன சாரதிகளுக்கு, சட்ட ரீதியான தடை இன்றி வாகனங்களைச் செலுத்துவதற்கான சலுகையை வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் போக்குவரத்து தடையினால் சாரதிகளுக்கு புதுப்பிக்க முடியாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கு விசேட சலுகைக் காலத்தை வழங்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு வாகனம் செலுத்துவது போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கருதப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மாஅதிபர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
