அரசியல்உள்நாடு

கோட்டாபய – பகுதி 2 ஆக மாறிவிட்டாரா ஜனாதிபதி அநுர ? ஹர்ஷண ராஜகருணா கேள்வி

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் உள்ளனர்? ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ‘கோட்டாபய பகுதி – 2’ஆக மாறிவிட்டாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உண்மையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொள்ளாமல், கலாநிதி என்று தன்னை தானே கூறிக்கொண்டு சபாநாயகர் மக்களை ஏமாற்றியிருக்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த அவமரியாதையை போக்கிக் கொள்வதற்கு இனியும் தாமதிக்காமல் உண்மையை வெளிப்படுத்துமாறு சபாநாயகரை வலியுறுத்துகிறோம். சபாநாயகருக்கு ஏற்படும் அவமானம் பாராளுமன்றத்துக்கு ஏற்படும் அவமானமாகும்.

சபாநாயகர் மீது மாத்திரமின்றி மேலும் சில அமைச்சர்களது பட்டங்கள் தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் உள்ளனர்? மக்களின் பாரிய ஆணையைப் பெற்றுள்ள கட்சி என்ற ரீதியில் நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஜே.வி.பி.க்கு உண்டு.

அதேபோன்று சபாநாயகர் பொய் கூறுகிறார் என்றால் உடனடியாக அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறோம். அன்று கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, எதிர்க்கட்சி எம்.பி.யாக அநுர குமார திஸாநாயக்க கடும் கண்டனங்களை முன்வைத்தார்.

ஆனால் இன்று அவரது ஆட்சியில் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளபோது அவரால் தீர்வினை வழங்க முடியாமலிருக்கிறது. அநுர இப்போது “கோட்டா – பகுதி 2” ஆகிறாரா?

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியிருந்தார். ஆனால் இன்னும் அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷவின் அதே நாடகத்தை அல்லவா இவரும் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார்? மக்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனரா? தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் போராட்டம்

editor

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில்..

‘அரபு வசந்தம்’ என நாம் முஸ்லிம்களை குறிக்கவில்லை : மத்திய கிழக்கின் உதவிகளை தடுக்க வேண்டாம்