அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் 11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்கள் அவர்களது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர்.

எனவே நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளரே வெற்றி பெறுவார் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆட்சியமைப்பதற்கு இன்னும் எமக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் ஆட்சியமைக்க வேண்டுமெனில் இன்னும் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்.

11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்காக உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போது தேசிய மக்கள் சக்தி பூர்த்தி செய்துள்ளது.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் தற்போது எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதையோ, யார் மேயர் வேட்பாளர் என்பதையோ கூற முடியாது அக்கட்சியினர் தடுமாறுகின்றனர்.

ஆனால் நாம் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னதாகவே எமது மேயர், பிரதி மேயரையும் அறிவித்திருக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

எனவே தற்போது ரீஸா சரூக் என்பவர் மேயர் வேட்பாளர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரையா நீங்கள் மேயர் வேட்பாளராக்குகின்றீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியிடம் கேள்வியெழுப்புகின்றோம்.

ஏனைய மாநகரசபைகளைப் போன்றல்லாமல் கொழும்பு மாநகரசபை பல்வேறு துறைகளில் மத்திய அரசாங்கத்துடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் மாநகரசபை அதிகாரமும் ஆளுங்கட்சியிடம் காணப்பட்டால் மாத்திரமே வேலைத்திட்டங்களை நெருக்கடிகள் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியும். மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றர். எமக்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவையற்றது.

நாளை வாக்கெடுப்பினை நடத்தினாலும் நாம் வெற்றி பெறுவோம். கொழும்பு மாநகர மேயர் ராய் கெலி பல்தசார் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

16 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor