அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.

இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் விசேட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Related posts

எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கம்

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்

X-Press Feeders நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்