அரசியல்உள்நாடு

உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுரவின் தலைமையில்

உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் இன்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன.

‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக ஒக்டோபர் 01-05 வரை குடியிருப்பு வாரம் அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி வசதி அற்ற சுமார் 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வகையில், வீடமைப்பு அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நிறைவு செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.

UN Habitat இலங்கை அலுவலகத்தின் தலையீட்டின் கீழ் இந்திய அரசின் Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்தின் அடையாள ரீதியான கையளிப்பு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் வீட்டுப் பத்திரங்கள் தாமதமான ஆயிரம் பயனாளிகளுக்கு காணிஉறுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 357 பயனாளிகளுக்கு அடையாள ரீதியில் வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. வீடு கட்டுவதற்கு நிதி வசதி அற்ற ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 157 பேருக்கு அடையாள ரீதியாக காசோலைகள் வழங்கப்பட்டன.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும், நகர அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

இதேவேளை, உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலைத் திறமைகளை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி மற்றும் வீட்டுத் திட்டமிடல் தொடர்பான படைப்புகள் உள்ளடங்கிய கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலகே, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களின் வீட்டுவசதி கனவை நிறைவேற்ற ஒரு விரிவான திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வீடு தொடர்பான எண்ணக்கருவை சமூகத்தில் கருத்தாடலுக்கு உட்படுத்துவதன் மூலம் வீட்டு திட்டமிடல் குறித்த முறையான திட்டத்தின் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கைச் சூழலை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்புத் திட்டத்தின் இலங்கை திட்ட முகாமையாளர் ஹர்ஷினி ஹலங்கொட வாசித்தார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார் , இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (அரசியல்) நவ்யா சிங்லா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

அம்பாறை, பொத்துவில் பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்!

editor