உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை, களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ராகம மருத்துவ பீடத்தின் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாகத் தயாரித்துள்ளனர்.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று மாத்திரைகள் கொண்ட கூட்டு மருந்துக்குப் பதிலாக, ஒரே ஒரு மாத்திரையை இந்தக் குழு தயாரித்துள்ளது.
இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக இரத்தக் குழாய்கள் வெடிப்பதால் ஏற்படக்கூடிய பக்கவாத நோய்த்தொற்று சுமார் 60 வீதம் வரை தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நரம்பியல் நோய் மருத்துவ நிபுணர் பிம்ஸர சேனநாயக்க:
பக்கவாதம் என நாம் குறிப்பிடும் நோய் மிகவும் பொதுவானது. சுமார் 80 வீதமானோருக்கு இது இரத்தக் குழாயில் இரத்தக்கட்டி அடைபடுவதாலோ அல்லது இரத்தக் குழாய் வெடிப்பதால் இரத்தக் கசிவு ஏற்படுவதாலோ உருவாகிறது.
இந்தப் புதிய மருந்து மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இந்நோய் மீண்டும் ஏற்படுவதைக் குறைக்க முடியுமா என்று எமது குழு பரிசோதனை செய்தது.
பரிசோதனை முடிவுகள் எமக்கு எதிர்பாராத அளவு பாரிய வெற்றியளித்துள்ளது.
அந்த வகையில் இந்த மருந்தை உட் கொள்வதன் மூலம் பக்கவாதம் மீண்டும் ஏற்படுவது 60 வீதம் வரை தடுக்கப்படுகிறது.
நாட்டில் 30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களில் 35 வீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுகிறது.சிலர் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிவதும் இல்லை.
இந்தப் புதிய மருந்து மூலம், இரத்த அழுத்தம் மிக விரைவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
அத்துடன் அது தொடர்ந்து அதே நிலையில் பேணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
