ஈரானின் ஆன்மீகத் தலைவர் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பும் ஈரானிய தேசத்திற்கு எதிரான முழு அளவிலான போருக்குச் சமமாகும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை (18) எச்சரித்தார்.
இராணுவத் தாக்குதல்களுக்கான திட்டங்களிலிருந்து வாஷிங்டன் பின்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், பரந்த அளவிலான சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா அமைதியின்மையைத் தூண்டுவதாக ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பேசிய பெசெஷ்கியான், செய்யித் அலி காமேனியை இலக்கு வைப்பது ஈரானுக்கு எதிரான ஒரு போர் நடவடிக்கையாக அமையும் என்று கூறினார். இது ஈரானின் தற்காப்புக் கொள்கையிலுள்ள நீண்டகால ‘சிவப்புக்கோடு’ (மீறக்கூடாத எல்லை) என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஈரானின் பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவின் “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் பிரச்சாரத்துடன் பெசெஷ்கியான் நேரடியாகத் தொடர்புபடுத்தினார்.
“ஈரானிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அமெரிக்க அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும் விதித்துள்ள நீண்டகால விரோதப் போக்கு மற்றும் மனிதநேயமற்ற தடைகளே ஆகும்,” என்று அவர் கூறினார்.
பொருளாதாரப் போரின் மூலம் ஈரானிய அரசை அவமதிக்கும் வகையில் இந்தத் தடைக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
