விளையாட்டு

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்

(UDHAYAM, COLOMBO) – ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீர வீராங்கனைகளை கொண்ட சங்கமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையாக சிரேஷ்ட இலங்கை ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் நேற்று சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை சந்தித்தனர்.

1948ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 75 வீர வீராங்கனைகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மற்றும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ள வீர வீராங்கனைகளின் சேமநலனை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கே இந்த சங்கம் அமைக்கப்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள வகையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் பெரும் எண்ணிக்கையிலானோர் முதியவர்கள்.

இலங்கைக்கான ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படவுள்ள வீரர்களுள் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் உள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முதியோரான ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் இளம் வீரர்களின் சேமநலனுக்காக முதியோர்களான வீரர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிகழ்வில் தமயந்தி தர்ஷா, ஜுலியன் போலின், சிறியாணி குலவன்ச, சுகத் திலகரத்ன, றுவன் அபேமான்ன, புஸ்மாலி ராமநாயக்க, அனுருத்த ரத்னாயக்க முதலான சிரேஷ்ட இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு

சனத் இனது தடைக்காலம் நிறைவுக்கு